Mittwoch, 30. Mai 2018

7.கம்பராமாயணம் -3

 21தசரதன் மீண்டும் வினவுதல்
  
1512.இந் நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி,
நெய்ந் நிலை வேலவன், ‘நீ திசைத்தது உண்டோ?
பொய்ந் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ?
உன் நிலை சொல்; எனது ஆணை உண்மை!’ என்றான்
.


     இந் நிலை நின்றவள் தன்னை - இந்நிலையில் நின்ற கைகேயியை;
எய்த நோக்கி- பொருந்தப் பார்த்து;  நெய்ந் நிலைவேலவன் - நெய்பூசப்பட்ட வேலையுடைய தயரதன்; ‘நீ திசைத்தது  உண்டோ - நீ மனம்
பிரமித்தது உண்டோ?; பொய்ந் நிலையோர்கள் புணர்த்த - வஞ்சத்
தன்மையுடையவர்கள் எவரேனம் கட்டிச்சொன்ன;வஞ்சம் உண்டோ -வஞ்சனைச் சொல் உள்ளதோ?; எனது ஆணை - என் மேல் ஆணையாக;
உன் நிலை உண்மை சொல் - இந்த உனது நிலையின் காரணத்தை
உண்மையாகச் சொல்வாய்;’என்றான் -.
     தயரதனுக்குக் கைகேயியின் மாறுபட்ட நிலை வியப்பாக இருத்தலின்,
‘நீ திசைத்தது உண்டோஅல்லது  பொய்ம்மையாளர்கள் எவரேனும் உன்
மனத்தைக் கெடுத்தனரோ?’ என்கிறான். முன்பு இராமன்மீதுஆணையிட்டுக்
கூறியவன் இப்பொழுது அவளக்கு அவன்பால் அன்பின்மையை உணர்ந்து
தன்மேல் ஆணை என்றான். திசைத்தல் - திகைத்தல்; பிரமித்தல்.      22


          கைகேயியின் கொடுஞ் சொற்கள்
  
1513.‘திசைத்ததும் இல்லை;
     எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை; முன் ஈந்த
     இவ் வரங்கள்,
குசைப் பரியோய்! தரின், இன்று
     கொள்வென்; அன்றேல்,
வசைத் திறன் நின்வயின் நிற்க,
     மாள்வென்’ என்றாள்.


     குசைப் பரியோய் - (மன்னன் கூறக் கேட்ட கைகேயி அவனிடம்)
‘கடிவாளம் பூட்டிய குதிரைகளைஉடைய அரசே!; 

திசைத்ததும் இல்லை -நான் திகைத்ததும் இல்லை;
தீயோர் எனக்குவந்து  இசைத்ததும்
இல்லை
 - கொடியோர் எவரும் என்னிடம் வந்து வஞ்சனையாகச்
சொன்னதும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள் - முன்னே (வாயாற்)
கொடுத்த இவ்விரண்டு வரங்களை; இன்று தரின் கொள்வென் -
இப்பொழுது  கொடுத்தால் பெற்றுக்கொள்வேன்; அன்றேல்- அன்றிக்
கொடுக்காமல் போனால்;  வசைத்திறன் நின்வயின் நிற்க - பழியின்
கூறுகள் நின்னிடம் நிலையாக இருக்குமாறு;  மாள்வென் - இறப்பேன்;’
என்றாள் -.
     தயரதன் சொற்களால் அவனுக்குத் தான் கேட்ட வரங்களைத் தர
விருப்பமில்லை என்று உணர்ந்தகைகேயி, ‘வரம்கொடுத்தால் வாழ்வேன்;
இன்றேல் சாவேன்’ என்கிறாள். குசைப்பரியோய் -கருத்துடை யடைகொளி.
யான் குதிரையைச் செலுத்தித் தேர் ஊர்ந்ததனால் அல்லவா நினக்குப்புகழ்
உளதாயிற்று என்று குறிப்பித்தவாறு. கருத்துடை அடைகொளி அணி.    


23  தசரதன் உற்ற பெருந் துயர்

1514.இந்த நெடுஞ் சொல் அவ் ஏழை கூறும் முன்னே,
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப,
சிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்;-
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்.


     மைந்தன் அலாது - மகனாகிய இராமனைத் தவிர;  உயிர் வேறு
இலாத மன்னன் -
தன்னுயிர் என்று வேறு ஒன்று இல்லாத அரசனாகிய
தயரதன்;  அவ் ஏழை - அந்த அறிவற்றவளானகைகேயி;  இந்த நெடுஞ்
சொல் கூறும் முன்னே - 
இந்தப் பெரிய வஞ்சினத்தைச்சொல்லிமுடிக்கு
முன்னே; வெந்த கொடும் புணில் - முன்பே தீயினால் சுட்ட கொடிய
புண்ணில்;வேல் நுழைந்தது ஒப்ப - கூரிய வேல் பாய்ந்தாற்போல;
சிந்தை திரிந்து -
மனம் தடுமாறி; திகைத்து - அறிவு மயங்கி; அயர்ந்து
வீழ்ந்தான் - 
சோர்ந்துதரையில் சாய்ந்தான்.

1515.‘ஆ கொடியாய்! எனும்; ஆவி காலும்; ‘அந்தோ!
ஓ கொடிதே அறம்!’ என்னும்; ‘உண்மை ஒன்றும்
சாக!’ எனா எழும்; மெய் தளாடி வீழும் -
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான்
.


     மாகமும் நாகமும் மண்ணும் - மேலுலகத்தையும் கீழுலகத்தையும்
நிலவுலகத்தையும்; வென்ற வாளான்-வெற்றி கொண்ட வாட்படையையுடைய
தயரதன்; ஆ கொடியாய் எனும் - (கைகேயியிபைப் பார்த்து) ஐயோ,
கொடியவளே என்பான்; ஆவி காலும் - பெருமூச்சுவிடுவான்; அந்தோ ஓ
கொடிதே அறம் என்னும் -
 ஐயோ! தருமம் மிகவும் கொடியதே என்பான்;
உண்மை ஒன்றும் சாக எனா - சத்தியம் என்பதொன்று சாகட்டும் என்று
சொல்லிக்கொண்டு;எழும் - எழுந்திருப்பான்; மெய் தளாடி வீழும் -உடம்பு  நிற்க முடியாமல் தள்ளாடிவிழுவான்.
     இப்பாட்டு ஒரு சோக சித்திரம்; மன்னவன் துயரத்தைப் படம்பிடித்துக்
காட்டுகிறது.  ஆகொடியாய் - ஆ - இரக்கக் குறிப்பு. தயரதன் அறமும்
உண்மையும் நன்மைக்குத் துணை புரியாமல் இராமன்காடு புகுதலாகிய
தீமைக்கு வழி வகுத்தலின் அவற்றை இகழ்கிறான். மாகம் - துறக்கம். நாகம்-
பாதாளம்.        

                                            25
1516.‘ “நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும்” என்ன,
கூரிய வாள்கொடு கொன்று நீக்கி, யானும்,
பூரியர் எண்ணிடை வீழ்வென்’ என்று, பொங்கும் -
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான்
.


     வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் - பெருவீரர்கள்
வீரத்தையும் வென்று தன்னுள்அடக்கி நிலைபெற்ற வேற்படையை உடைய
தயரதன்;  இஞ் ஞாலம் எங்கும் - இவ்வுலக முழுவதிலும்; நாரியம்
இல்லை என்ன -
 பெண்கள் இல்லை என்னும்படி;  கூரிய வாள் கொடு
கொன்றுநீக்கி -
 கூர்மை பொருந்திய வாளால் கொலை செய்து போக்கி;
யானும் பூரியர் எண்ணிடைவீழ்வென் என்று - யானும் கீழ்மக்கள்
எண்ணிக்கையில் சேருவேன் என்று; பொங்கும் -சினம் மிகுவான்.
     கைகேயியின் மேல் எழுந்த சீற்றத்தால் தயரதன் பெண்கள்
கூட்டத்தையே அழித்துவிட எண்ணினான்.ஆனால், அச்செயல் தகாது
என்று அடங்கினான். இதனால் அவன் சீற்ற மிகுதி 

வெளிப்படுகிறது. 

    26
1517.கையொடு கையைப் புடைக்கும்; வாய் கடிக்கும்;
‘மெய்யுரை குற்றம்’ எனப் புழுங்கி விம்மும்;
நெய் எரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும் -
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன்.


     வையகம் முற்றும் நடந்த - உலகம் முழுவதும் பெருவழக்காய்
அறியப் பெற்ற; வாய்மை மன்னன் - சத்தியம் தவறாத தயரதன்; கையொடு
கையைப் புடைக்கும் -
 கையுடன்மற்றொரு கையை ஓங்கி அடிப்பான்;
வாய் துடிக்கும் - உதட்டைக் கடிப்பான்;  மெய்உரை குற்றம் என -உண்மை சொல்லுதல் தீங்கைத் தருவது என்று சொல்லி; புழுங்கிவிம்மும்-மனம் வெந்து பொருமுவான்; நெய் எரி உற்று என - நெய்யில் நெருப்புப்
பட்டாற்போல;  நெஞ்சு அழிந்து - மனம் உடைந்து; சோரும் -வருந்துவான்.
     வாய்மை மன்னனாகிய தயரதனை மெய்யுரை குற்றம் என எண்ணச்
செய்தது அவனுக்கு இராமபிரான்பால்உள்ள பேரன்பு. கைபுடைத்தல்
வாய்கடித்தல் ஆகியவை சினத்தால் நிகழும் 

மெய்ப்பாடுகள்.  

         27
1518.‘ஒறுப்பினும் அந்தரம், உண்மை ஒன்றும் ஓவா
மறுப்பினும் அந்தரம்’ என்று, வாய்மை மன்னன்,
‘பொறுப்பினும் இந் நிலை போகிலாளை வாளால்
இறுப்பினும் ஆவது இரப்பது’ என்று எழுந்தான்.


வாய்மை மன்னன் - சத்தியத்தைப் பேணிக் காக்கும் தயரதன்;
‘ஒறுப்பினும்அந்தரம் - இவளைத் தண்டித்தாலும் தீமை; உண்மை
ஒன்றும் ஓவா -
மெய்யைச்சிறிதும் காவாமல்; மறுப்பினும் அந்தரம் -
கொடுத்த வரங்களைத் தர மறுத்தாலும்தீமை;’  என்று - என்று கருதி; ‘இந்
நிலை போகிலாளை -
இந்நிலையினின்றும்மாறாதவளை; பொறுப்பினும் -
பொறுத்து அடங்குவதைக் காட்டிலும்; வாளால் இறுப்பினும்- வாளால்
கொல்வதைக் காட்டிலும்; இரப்பது ஆவது - இவளை வேண்டி யாசிப்பதே
பொருத்தம்;’ என்று எழுந்தான் - என்று கருதி, அது செய்யப்
புறப்பட்டான்.
     பலவாறாகத் துன்பப்பட்ட தயரதன் இறுதியில் இரந்து வேண்டுதல்
ஒருவேளை பயன் தரலாம் என்றுகருதி அவ்வாறு செய்யத் துணிந்தான்.
பொறுப்பு, இறுப்பு - தொழிற்பெயர்கள்; இன் - உறழ்ச்சிப்பொருளில்
வந்தது.          


கைகேயியின் காலில் விழுந்து, 
தயரதன் இரத்தல்  
கலிநிலைத்துறை

1519.‘கோல் மேற்கொண்டும் குற்றம்
     அகற்றக் குறிகொண்டார் -
போல், மேல் உற்றது உண்டு எனின்
     நன்று ஆம் பொறை’ என்னா,
கால்மேல் வீழ்ந்தான் - கந்து கொல்
     யானைக் கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி
     வணங்கி மிடை தாளான்.
     கந்து கொல் யானைக் கழல் மன்னர் - கட்டுத்தறியை முறிக்கும்
யானைப்படையையுடைய வீரக்கழல் அணிந்த அரசர் பலரும்; மேல் மேல்
முந்தி வந்து -
மேலே மேலே(ஒருவர்க் கொருவர்) முற்பட்டு வந்து;
வணங்கி மிடை தாளான் - வழிபட்டு நெருங்குகின்றபாதங்களையடைய
தயரதன்; கோல் மேற்கொண்டும்- தாம் ஆட்சியை மேற்கொண்டிருந்தாலும்;
குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்போல் - (அதில்வரும்) குற்றங்களை
நீக்கக்கருத்துக் கொண்ட நல்ல அரசரைப் போல;  மேல் உற்றது  உண்டு
எனின் -
மேலே வரும் நன்மைஉண்டென்றால்; பொறை நன்று ஆம்
என்னா -
பொறுமை நல்லதாகும் என்று எண்ணி; கால்மேல் வீழ்ந்தான்-
கைகேயியின் கால்களில் விழுந்து வணங்கினான்.

     தம் பதவியே பெரிதெனக் கருதாமல் குற்றம் நிகழாது காக்க அரும்
பாடுபடும் அரசரைப் போலத்தன் பெருமை நோக்காது  கைகேயியைச்
சினம் தணிவித்துக் குற்றம் நிகழாது காக்க எண்ணிய தயரதன்அவள் காலில்
விழுந்து வணங்கினான். கைகேயி மனம் மாறி வரங்களைத் தருமாறு
வேண்டுவது  தவிர்ந்தால்.அவளுக்கு வரந்தர மறுத்தலால் வரும் குற்றமும்.
இராமனுக்கு




அரசளிப்பதாகச் சொன்ன வாக்குப் பொய்த்தலும் நீங்கி நன்மை உண்டாகும்
என்ற எண்ணிஅவ்வாறு செய்தான். உற்றது - கால வழுவமைதி.       29

1520.‘கொள்ளான் நின் சேய் இவ் அரசு;
     அன்னான் கொண்டாலும்,
நள்ளாது இந்த நானிலம்;
     ஞாலம்தனில் என்றும்
உள்ளார் எல்லாம்ஒத
     உவக்கும் புகழ் கொள்ளாய்;
எள்ளா நிற்கும் வன் வழி கொண்டு
     என் பயன்?’ என்றான்.
     ‘இவ் அரசு நின் சேய் கொள்ளான் - இந்த அரசாட்சியை நினக்கு
மகனாகிய பரதன்ஏற்றுக்கொள்ள மாட்டான்; அன்னான் கொண்டாலும் -
(ஒருகால்) அவன் ஏற்றுக்கொண்டாலும்;இந்த நானிலம் நள்ளாது -
இவ்வுலகம் அதனை விரும்பாது;  ஞாலம்தனில் உள்ளார் எல்லாம்-
உலகில் உள்ள எல்லோரும்; என்றும் ஓத உவக்கும் - எந்நாளும்
புகழ்வதைவிரும்பும்;  புகழ் கொள்ளாய் - கீர்த்தியைப் பெறமாட்டாய்;
எள்ளா நிற்கும்வன்பழி கொண்டு - என்றும் எல்லோரும் இகழ்தற்குரிய
வலிய பழியை ஏற்பதனால்;  பயன்என் - பயன் யாது?;’  என்றான் -.
     தயரதன் பரதன் பண்புகள் அறிந்தவனாதலின் அவன் அரசாட்சியைக்
கொள்ளான் என்றான்.கொண்டாலும் - உம்மை கொள்ளுதலின் அருமை
சுட்டியது. நானிலம் - ஆகுபெயராய் மக்களை உணர்த்திற்று.என்றும்
என்பதனைப் பழியோடும் கூட்டி உரைக்க.                         30

Keine Kommentare:

Kommentar veröffentlichen