Freitag, 6. Juli 2018

8.தேம்பாவணி -5


                  23
அலைபுறங் கொண்ட ஞாலத் தடரிருள் சீக்க யாக்கை
நிலைபுறங் கொண்ட ஞான நெடுஞ்சுட ரனையான் போகக்
கொலைபுறங் கொண்ட வேந்தன் குணத்துரி நகரு நாடும்
வலை புறங் கொண்ட பாவ மலிந்திருள் மொய்த்த தன்றே.
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் சீக்க, யாக்கை
நிலை புறம் கொண்ட ஞான நெடுஞ் சுடர் அனையான் போக,
கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து, உரி நகரும்நாடும்
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து, இருள் மொய்த்தது அன்றே
.


     கடலைப் புறத்தே சூழக் கொண்ட இவ்வுலகத்தில் செறிந்துள்ள
இருளைப் போக்கும் வண்ணம், உடலுள்ள நிலையைப் புறத்தே காட்டி
வந்துதித்த நெடிய ஞானச் சுடர் போன்ற ஆண்டவன் நீங்கிப் போகவே,
கொலையை வெளிப்டையாகவே கொண்ட எரோது மன்னனின்
குணத்தைப் போலவே, அவனுக்குரிய நகரத்திலும் நாட்டிலும் வலையாக
மூடிக்கொண்டது போன்ற பாவம் மலிந்து, இருளே மொய்த்தது.



                 24
கதிதள்ளி யுயர்வா னேற்றுங் கனிந்ததம்  வேந்த னோடும்
பதிதள்ளி யமரர் போகப் பகையுநீண் பசியு நோயு
நிதி தள்ளி மிடியுங் கேடு நிசிதமுந் தீய யாவு
மதிதள்ளி மருட்டும் பேயு மறுகுடி யாயிற் றன்றே
கதி தள்ளி உயர் வான் ஏற்றும் கனிந்த தம் வேந்தனோடும்
பதி தள்ளி அமரர் போக, பகையும் நீண் பசியும் நோயும்
நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும்,
மதி தள்ளி மருட்டும் பேயும் மறுகுடி ஆயிற்று அன்றே
.



     உயர்ந்த வானுலகம் முடிவில்லாது போற்றும் கனிவுக்குரிய தம்
அரசனாகிய ஆண்டவனோடு வானவரும் அந்நகரை விட்டு விலகிப்
போகவே, பகையும் நீடித்த பசியும் நோயும் செல்வத்தைப் போக்கிய
வறுமையும் கேடும் இகழ்ச்சியும் தீயன யாவும், வந்து சேர்ந்ததோடு,
அறிவை அகற்றி மயக்கும் பேயும் அங்கு குடியாய் வந்து சேர்ந்தது. 



   25
மணிவளர் முகிற்றண் ணூர்தி வானுடுக் கொடிதண் டிங்க
ளணிவளர் குடைகொண் டெங்கு மருணிழல் மன்னன் போகப்
பணிவளர் நகரு நாடும் பனிப்புறப் பகைத்து வாட்டிப்
பிணிவளர் வினையின் செந்தீப் பிரிவிலா மேய்ந்த தன்றே.
மணி வளர் முகில் தண் ஊர்தி, வான் உடுக் கொடி, தண் திங்கள்
அணி வளர் குடை கொண்டு, எங்கும் அருள் நிழல் மன்னன் போக,
பணி வளர் நகரும் நாடும் பனிப்பு உற, பகைத்து வாட்டி,
பிணி வளர் வினையின் செந் தீ, பிரிவு இலா மேய்ந்தது அன்றே.
 
     நீலமணி போல் விளங்கும் மேகத்தைக் குளிர்ந்த வாகனமாகவும்,
விண்மீனைக் கொடியாகவும், குளிர்ந்த மதியை அழகு பொருந்திய
குடையாகவும் கொண்டு, எங்கும் அருளாகிய நிழலைத் தரும் அரசனாகிய
ஆண்டவன் நீங்கிப் போகவே, அணிகலன் நிறைந்த யூதேய நாடும்
எருசலேம் நகரமும் நடுங்குமாறு, துன்பம் வளர்வதற்குக் காரணமான தீவினையால் வரும் செந்தீ பகைத்து வாட்டி, விலகாமல்
மேய்ந்துகொண்டிருந்தது.

                இயற்கையின் இரக்கம்
     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்.


          26
கண்ண கன்ற வகழிக லங்கலிற்
றண்ண கன்றத ரங்கந்த ளம்பலே
யெண்ண கன்றகு ணத்திவர் நின்மினென்
றொண்ண கன்றகை நீட்டின தொத்தவே.
கண் அகன்ற அகழி கலங்கலின்,
தண் அகன்ற தரங்கம் தளம்பலே,
எண் அகன்ற குணத்து இவர், "நின்மின்!"
 என்று,
ஒண் அகன்ற கை நீட்டினது ஒத்தவே
.

     இடம் பரந்த அகழி காற்றில் அசைந்து கலங்குதலால், குளிர்ந்த
அகன்ற அலைகள் கரையில் தளம்பும் தோற்றம், எண்ணுக்கு அடங்காத
குணம் படைத்த இவர்களை, "போகாதே நில்லுங்கள்!" என்று, ஒளி
பொருந்திய நீண்ட கைகளை நீட்டித் தடுப்பதை ஒத்திருந்தது.


   'தளம்பல்' என்ற எழுவாய்க்குரிய 'ஒத்தது' என்ற பயனிலையில் ஈறு 
கெட்டது. பின் இதுபோல் வருவனவும் அமைத்துக் கொள்க. முதலடியின்
இரண்டாஞ்சீர் விட்டிசைத்தற்கண் 'கன்ற' எனத் தேமாவாக நின்று,
வருஞ்சீர் 'வகழிக' எனக் கருவிளமாய் இசை நிறைத்தல் யாப்பமைதிக்குப்
பொருந்துவதெனக் காண்க. இரண்டாமடியின் மூன்றாஞ்சீர் 'ரங்கந்த' எனத்
தேமாங்காயாக நிற்றலும், ஒரு நிரைக்கு இரு நேர் நின்று கருவிளம்
போன்று இசை நிறைத்தலும் காண்க. இதனையும், 'ரங்கந் தளம்பலே' எனச்
சீர் பிரித்து, முதல் விதிக்கு அமையக் கொள்ளுதலும் ஒன்று. முதல் விதியிற்
குறித்த சீர்கள் இரண்டாம் விதிக்கேற்பப் பிரிக்க அமையாமையும் காண்க.



27
அலைய லைந்தலர் கூப்பிய தாமரை
யிலைய லைந்தலை மீதெழுந் தாடலந்
நிலைய டைந்தனர் நீங்கலிர் நின்மினென்
றுலைவ டைந்துகை கூப்பிய தொத்தவே.
அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை
அலை அலைந்து அலை மீது எழுந்துஆடல், அந்
நிலை அடைந்தனர், "நீங்கலிர்! நின்மின்!" என்று,
உலைவு அடைந்து கை கூப்பியது ஒத்தவே.
   

இலையோடு கூடி அசைந்து அலைக்குமேல் எழுந்து நின்று ஆடும்
தோற்றம், அவ்விடம்வந்தடைந்த இம்மூவரை "எம்மை விட்டு நீங்காதீர்கள்! நில்லுங்கள்!" என்று, கலக்கம் அடைந்து கை கூப்பித் தடுப்பதை ஒத்திருந்தது.

             28
நாக நெற்றியி னன்மணி யோடைபோ
னாக நெற்றியி னன்மணி யாறுபாய்
நாக நெற்றியி னன்மலர்க் காவப்பா
னாக நெற்றியி னன்மதி தோன்றிற்றே.
நாக நெற்றியின் நன் மணி ஓடை போல்,
நாக நெற்றியின் நன் மணி ஆறு பாய்
நாக நெற்றியின் நன் மலர்க் கா அப்பால்
நாக நெற்றியின் நன் மதி தோன்றிற்றே
 

யானையின் நெற்றியில் அணிந்த நல்ல மணிகள் பதித்த பட்டம் போல், மலையின் உச்சியினின்று நல்ல மணிகளைக் கொண்ட ஆறு பாய்ந்தோடுவதும், தன் உச்சியில் நல்ல மலர்களைக் கொண்ட புன்னைமரங்கள் நிறைந்ததுமான சோலைக்கு அப்பால், வானத்தின் நெற்றியில் நல்ல திங்கள் அப்பொழுது உதித்தது.'நெற்றியின் நன் மலர் நாகக்கா' என மாற்றிக் கூட்டுக. 'மதி' பிறைமதி என்பது, வரும் பாடலால் அறிக. 


              29
உறைகி டந்தவிண் வேந்துயி ருண்பலென்
றுறைகி டந்தயி லோங்கர சைப்பகைத்
துறைகி டந்தக டற்பறைக் கோர்குணி
லுறைகி டந்தன வொண்பிறை தோற்றமே.
உறை கிடந்த விண் வேந்து உயிர் உண்பல் என்று
உறை கிடந்த அயில் ஓங்கு அரசைப் பகைத்து,
உறை கிடந்த கடல் பறைக்கு ஓர் குணில்
உறை கிடந்து அன, ஒண் பிறை தோற்றமே

     ஒளி பொருந்திய அப்பிறையின் தோற்றம், மழையைக் கொண்டுள்ள விண்ணுலக வேந்தனாகிய குழந்தை நாதனின் உயிரை உண்பேனென்று உறைக்குள் கிடந்த வேலை உருவி உயர்த்திய அரசனைப் பகைத்து, உப்புக்காரம் அமைந்து கிடந்த கடலாகிய பறையை அடித்துப் போர்க்குரல் எழுப்புவதற்கென்று ஒரு குறுந்தடி வானத்தில் கிடந்ததுபோன்று இருந்தது.    
  
கிடந்த + ஆயில் - 'கிடந்தவயில்' என வேண்டியது, 'கிடந்தயில்' எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.

             30
சிதமி டைந்தலர்ச் சேடனை யாள்கையிற்
சிதமி டைந்தலர் சேடனை நோக்குபச்
சிதமி டைந்தலர் சேடெனத் தாங்குபற்
சிதமி டைந்தலர் சேடுகண் ணொத்தவே.
சிதம் மிடைந்த அலர்ச் சேடு அனையாள் கையில்
சிதம் மிடைந்து அலர் சேடனை நோக்குப,
சிதம் மிடைந்து அலர் சேடு எனத் தாங்கு பல்
சிதம் மிடைந்து, அலர் சேடு கண் ஒத்தவே. 

Keine Kommentare:

Kommentar veröffentlichen