Montag, 25. Juni 2018

8.தேம்பாவணி -2

அழல் குளித்த பைந் தாதோ? கண் பாய் வேலோ? அகல் வாய்ப் புண்
 புழல் குளித்த செந் தீயோ? உருமோ? கூற்றோ? பொருவு இன்றி 
நிழல் குளித்த உரு வானோன் கொடுஞ் சொல் கேட்டு, நெடுங் கடல் நீர்ச் சுழல் குளித்த மனம் சோர்ந்து, வளன், அப்பணியைத் தொழுது, உளைந்தான்.

அச் சொல்லைக்கேட்ட சூசையின் உள்ளம் நெருப்பில் மூழ்கிய பசுமையான பூந்தாதோ? அக்கொடுஞ்சொல் கண்ணில் பாய்ந்த வேல் தானோ? அகன்ற வாயை உடைய புண்ணின் துவாரத்துள் நுழைந்த செந்தீயோ? இடியோ? கூற்றுவனோ? ஒப்பற்ற விதமாய் ஒளியில் மூழ்கிய உருவத்தைக் கொண்ட அவ்வானவனின் கொடுஞ் சொல்லைக் கேட்டு, நெடிய கடல் நீரில் உண்டான சுழியில் அகப்பட்டு மூழ்கிய தன்மையாய் மனம் சோர்ந்து, அக்கட்டளையைச் சூசை தொழுது ஏற்றுக்கொண்டு, பின்னும் வருந்தினான். 

6
மலிநிழற்பட் டலர்மலரின் னொய்யஞ் சேயின் மழவினையும் 
 பொலிநிழற்பட் டலர்பூங்கொம் பொத்தா ணொய்வும் புரைவினையா லலிநிழற்பட் டெரியெசித்தார் நாட்டின் சேணு மாய்ந்தவளன் 
புலிநிழற்பட் டேங்கியமான் போல வேங்கிப் புலம்பினனால். 
 மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழவினையும், 
பொலி நிழல் பட்டு அலர் பூங் கொம்பு ஒத்தாள் நொய்வும், புரை வினையால் அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன், 
புலி நிழல் பட்டு ஏங்கிய மான் போல ஏங்கிப் புலம்பினன் ஆல்.

 நிறைந்த நிழலில் வளர்ந்து மலர்ந்த பூவினும் மென்மையான அழகிய மகனின் இளமையையும், பொலிந்த நிழலிடையே வளர்ந்து மலர்ந்த பூங்கொம்பு போன்ற மரியாளின் மென்மையையும், தம் பாவச் செயல்களால் நெருப்பின் நிழலில் அகப்பட்டதுபோல எரியும் எசித்து மக்கள் வாழும் நாட்டின் தொலைவையும் ஆராய்ந்து பார்த்த சூசை, புலியின் நிழல் தன்மேல் பட்டு ஏங்கிய மான்போல ஏங்கிப் புலம்பினான். 

 7
 அறிவின்மை யுறவின்மை யறத்தி னின்மை யங்கட்சென் 
 னெறியின்மை நெறிதொலைக்கு முறுதி யின்மை நெறிதன்னிற் 
 பறியின்மை சார்பின்மை தன்பா லின்மை பரிசல்லாற் 
பிறிவின்மை யோர்ந்துளைந்தா னுளைந்து மீண்டே பிரிவுற்றான். 
 அறிவு இன்மை, உறவு இன்மை, அறத்தின் இன்மை, அங்கண் செல் 
 நெறி இன்மை, நெறி தொலைக்கும் உறுதி இன்மை, நெறி தன்னில் 
 பறி இன்மை, சார்பு இன்மை, தன்பால் இன்மை பரிசு அல்லால் 
 பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான்; உளைந்து, மீண்டே பிரிவு உற்றான்

அங்கு அறிமுகமானவர் இல்லாமை, உறவினர் இல்லாமை, அறவுணர்வு கொண்டவர் இல்லாமை, அங்குச் செல்லும் வழித் தெரியாமை, வழியைக் கடந்து தொலைக்கும் துணை இல்லாமை, வழியில் பொன் இல்லாமை, பிற சார்பு எதுவும் இல்லாமை, தன்னிடம் வறுமைத்தன்மையே அல்லாமல் வேறொன்றும் இல்லாமை - இவற்றையெல்லாம் நினைந்து வருந்தினான்; இவ்வாறெல்லாம் சிறிது நேரம் வருந்தியும், பின் அங்கிருந்து பிரிந்து மரியாளிடம் சென்றான். 

 எசித்துப் பயணம் -

விளம், - விளம், - மா, கூவிளம் 

 8 
 வேரியந் தாரினான் விரைந்தெ ழுந்தனன் 
 மாரியந் தாரையின் வளர்கண் டாரைநீர் 
நேரியந் துணைவியை நேடி நாயகன் 
றேரியங் கேவிய பணியைச் செப்பினான். 
 வேரி அம் தாரினான் விரைந்து எழுந்தனன்;
மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர் 
 நேரி, அம் துணைவியை நேடி, நாயகன் 
தேரி அங்கு ஏவிய பணியைச் செப்பினான். 

 மணமுள்ள அழகிய மலர்க் கொடியை மாலையாகக்கொண்ட சூசை விரைந்து எழுந்தான்; மழையின் அழகிய நீர்த் தாரை போல், தன் கண்ணில் பிறக்கும் கண்ணீர்த் தாரை சொரிந்து, அழகிய தன் துணைவியைத் தேடிக் கண்டு, ஆண்டவன் நல்ல தென்று தெளிந்து அங்கு வானவன் மூலம் ஏவிய கட்டளையை எடுத்துக் கூறினான். நேர்ந்து, தேர்ந்து என்ற சொற்கள், எதுகைப் பொருட்டு, நேரி, தேரி என நின்றன. 

 9 
செய்யிதட் டாமரை பழித்த சீறடித் 
துய்யிதட் டுப்பவிழ் சுருதி வாயினா 
ளையிதட் டாரினா னறையத் தீமுனர் 
 நொய்யிதட் டாதென நொந்து வாடினாள். 
 செய் இதழ்த் தாமரை பழித்த சீறு அடித் 
துய் இதழ்த் துப்பு அவிழ் சுருதி வாயினாள், 
 ஐ இதழ்த் தாரினான் அறைய, தீமுனர் 
 நொய் இதழ்த் தாது என நொந்து வாடினாள்.

 செந்நிற இதழ்களைக் கொண்ட தாமரை மலரைப் பழித்த சிறிய அடிகளும் தூய உதடுகள் பவளம் போல் விரியும் வேத வாயும் கொண்ட மரியாள், அழகிய இதழ்கள் உள்ள மலர்க் கொடியை மாலையாகக் கொண்ட சூசை இவ்வாறு கூறவும், மெல்லிய இதழ்களிடையே இருக்கும் பூந்தாது தீயின்முன் இடப் பட்டாற்போல நொந்து வாடினாள். 'இதழ்' என்ற சொல், 'இதள்' என நின்றாற் போலக் கொண்டு, வருமொழியில் தகரம் வர, ளகரமும் தகரமும் டகரங்களாக மாறும் விதியை ழகரத்திற்கும் பொருந்துவதாகக் கொண்டமைத்த இடம் இது. கந்த புராணத் தொடக்கத்துக் கச்சியப்ப முனிவர், 'திகழ் தசக்கரம்' என்பதனை, 'திகட சக்கரம்' எனப் பொருத்தியது இதற்கு மேற்கோளாக அமையும். சிறுமை + அடி - சீறடி. 

 10
 எதிரிலான் பகையிலா னிணையெ லாமிலா 
 னுதிரிலா மதுகையா லுணர்வின் மேனின்றான் 
 விதிரிலா விதியிதென் றிறைஞ்சி வேண்டினர் 
 பிதிரிலாத் திருவுளம் பேணித் தேரினார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen