Donnerstag, 28. Juni 2018

8.தேம்பாவணி -3

எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான்
உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான்
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர்;
பிதிர் இலாத் திரு உளம் பேணித் தேரினார்.


     தனக்கு எதிர் இல்லாதவனும் பகைஇல்லாதவனும் ஒப்புமை எதுவும்
இல்லாதவனும் கெடுதல் இல்லாத வல்லமை உள்ளவனும் உணர்வுக்கு
எட்டாமல் உயர்ந்து நின்றவனுமாகிய ஆண்டவனின் உதறக்கூடாத கட்டளை இது என்று அவ்விருவரும் அவனைத் தொழுது வேண்டினர்; சிதைதல் இல்லாத அவன் திருவுளத்தை விரும்பி ஏற்றுத் தெளிவு கொண்டனர்.



                          11
தேரிய மனத்தவர் தேறி நாயக
னாரிய முகத்துறை யங்க ணேகினார்
நீரிய முகிலெனப் படத்தை நீக்கலாற்
சூரிய னவியெனத் தோன்றல் தோன்றினான்.
தேரிய மனத்தவர் தேறி, நாயகன்
ஆரிய முகத்து உறை அங்கண் ஏகினார்;
நீரிய முகில் என் அப் படத்தை நீக்கலால்,
சூரியன் நவி எனத் தோன்றல் தோன்றினான்.


     தெளிந்த மனங் கொண்ட அவ்விருவரும் தேறி, ஆண்டவன்
அழகிய முகத்தோடு இருந்த அவ்விடம் சென்றனர்; நீரால் நிறைந்த
மேகம் என்னத்தக்க அப் போர்வையை விலக்கவும், ஆதவன் அழகு
போல் அம்மகன் தோன்றினான்.

     நவி - நவ்வி என்ற சொல்லின் இடைக்குறை.




                                12
முப்பொழு தொருபொழு தாக முற்றுணர்ந்
தெப்பொழு தனைத்துமெப் பொருளி யாவிலு
மெய்ப்பொரு டெளித்தவிர் காட்சி மேன்மையா
னப்பொழு துறங்கினா னன்னப் பார்ப்பனான்.        
முப் பொழுது ஒரு பொழுது ஆக முற்று உணர்ந்து
எப் பொழுது அனைத்தும் எப்பொருள் யாவினும்
மெய்ப்பொருள் தெளித்து அவிர் காட்சிமேன்மையான்,
அப்பொழுது உறங்கினான், அன்னப் பார்ப்பு அனான்


.
இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலங்களும் ஒரு காலமே  போல முற்றிலும் உணர்ந்து, எக் காலமாயினும் அனைத்திலும் எப்பொருளா
யினும் யாவற்றிலும் உண்மைப் பொருளைத் தெளிவித்து விளங்கும் முற்றறிவினால் மேம்பட்டவனாகிய குழந்தைநாதன், அன்னக் குஞ்சு போன்றவனாய், அப்பொழுது உறங்கிக் கொண்டிருந்தான்.

     
பொருள் + யாவினும் - 'பொருளியாவினும்' என, யகரப் புணர்ச்சியில்
இடையே இகரம் பெற்றது.



              13
கலைமுகந் தருந்திய புலமைக் காட்சியோ
யலைமுகந் தருந்திய வருளென் றுன்பணி
கொலைமுகந் தருந்துயர் கொண்டுஞ்
செய்வலென்
றுலைமுகந் தருந்தழற் குருகி யேந்தினாள்.
"கலை முகந்து அருந்திய புலமைக் காட்சியோய்,
அலை முகந்து அருந்திய அருள் என்று, உன் பணி,
கொலை முகந்த அருந்துயர் கொண்டும்,
செய்வல்!" என்று,
உலை முகந்த அருந் தழற்கு உருகி, ஏந்தினாள்.


     மரியாள், உலையினின்று வாரிக் கொண்ட அரிய நெருப்புப் போன்ற அந்நிலைக்கு மனம் உருகி, "கலைகளையெல்லாம் வாரி உட்கொண்ட புலமைக்கு ஒப்பான அறிவு கொண்ட ஆண்டவனே, கொலையைத் தழுவ வேண்டிய அரிய துயரத்தை அடைய நேர்ந்தாலும், அதனை, கடலை வாரி உண்ட (கடலினும் பெரிதாய) உன் அருளென்று மதித்து, உன் கட்டளையைச் செய்வேன்!" என்று கூறி, அம்மகனை ஏந்தி எடுத்துக் கொண்டாள்.


            14
ஏர்வள ரடிபணிந் திளவ லேந்தலி
னீர்வளர் குவளைதேன் றுளித்த னேரவன்
சீர்வளர் விழிமலர் சிறந்து முத்துகச் சூர்வளர்
மனத்தவர் துகைத்து ளேங்கினார்.
ஏர் வளர் அடி பணிந்து இளவல் ஏந்தலின்,
நீர் வளர் குவளை தேன் துளித்தல் நேர், அவன்
சீர் வளர் விழி மலர் திறந்து முத்து உக,
சூர் வளர் மனத்து அவர், துகைத்து உள் ஏங்கினார்.


 அழகு நிறைந்த அடிகளைப் பணிந்து குழந்தை நாதனை ஏந்தி
எடுக்கவும், நீரில் வளரும் குவளை மலர் தேனைத் துளித்தது போல்,
அவன் சிறப்பு நிறைந்த தன் கண்ணாகிய மலரைத் திறந்து முத்துப் போன்ற கண்ணீரைச் சொரியவே, துன்பம் பெருகிய மனத்தைக் கொண்ட அவ்விருவரும், மிதிக்கப்பட்ட தன்மையாய்த் தம் உள்ளத்துள் ஏங்கினர்.


             15

கதிர்தருங் காதலன் கன்னித் தாயுரத்
தெதிர்தரும் விழிகலந் தினிதிற் சாய்ந்தனன்
முதிர்தரு மமிர்துக முறுவற் கொட்டலாற்
பொதிர்தரு மின்பமுற் றிருவர் பொங்கினார்.

கதிர் தரும் காதலன் கன்னித் தாய் உரத்து
எதிர் தரும் விழி கலந்து இனிதின் சாய்ந்தனன்,
முதிர் தரும் அமிர்து உக முறுவல் கொட்டலால்,
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார்.


       ஒளியை வீசும் மகன் தன் கன்னித் தாயின் மார்பில், எதிர்ப்
படும் இருவர் கண்களும் கலக்குமாறு நோக்கி இனிது சாய்ந்து கொண்டவனாய், முதிர்ந்த அமிழ்தத்தைப் பொழிந்த தன்மையாய்ப் புன்முறுவல் காட்டவே, அவ்விருவரும் நிறைவு தரும் இன்பம்
அடைந்து மனம் பூரித்தனர்.


              16
பொங்கிய வருத்தியாற் பொலிந்த கன்னியுந்
தங்கிய கொடியொடுட் டளிர்த்த சூசையும்
பங்கய மலரடி பணிந்து பாலனை
யங்கிவ ரகலுதற் காசி கேட்டனர்.
பொங்கிய அருத்தியால் பொலிந்த கன்னியும்,
தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும்,
பங்கய மலர் அடி பணிந்து, பாலனை அங்கு
இவர் அகலுதற்கு ஆசி கேட்டனர்.


       பொங்கிய ஆசையோடு பொலிந்த கன்னித் தாயும்,
தன்னிடமுள்ள மலர்க் கொடியோடு உள்ளமும் தழைத்த சூசையும்,
குழந்தை நாதனின் தாமரை மலர் போன்ற அடிகளை வணங்கி,
அங்குப் போவதற்கு இவ்விருவரும் அப்பாலனையே ஆசி கேட்டனர்.  

Keine Kommentare:

Kommentar veröffentlichen